Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: நாகர்பாளையம் கிராமத்தில், உழவர் பயிற்சி மூலம் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மல்லசமுத்திரம் வட்டாரம், நாகர்பாளையம் கிராமத்தில் நடந்த விவசாயிகள் பயிற்சி முகாமிற்கு, வேளாண் உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்தார்.
வேளாண்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துறைத்தார். நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய அலுவலர் தனம் கலந்துகொண்டு, உழவர் பயிற்சி நிலைய செயல்பாடுகள், அட்மா திட்டம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் பற்றி எடுத்துரைத்து விதை நேர்த்தி செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயப்பிரபா கலந்துகொண்டு, தோட்டக்கலை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், நுண்ணீர் பாசனத்திட்டம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்குதல் பற்றி எடுத்துரைத்தார்.
பட்டுவளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் தமிழ்செல்வி கலந்துகொண்டு, பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், மல்பெரி சாகுபடி தொழில்நுட்பம் பற்றி கூறினார்.
வணிகத்துறை உதவி அலுவலர் தங்கவேல் கலந்து கொண்டு, உழவர் சந்தையின் செயல்பாடுகள், உழவர்சந்தை விற்பனை அடையாள அட்டை பெறுதல், ஒழுங்குறை விற்பனைகூடம் ஏலம் முறைகள் பற்றி கூறினார். கால்நடைதுறை உதவி மருத்துவர் கோமதி கலந்துகொண்டு, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பூசியின் அவசியம் குறித்து பேசினார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் மோகன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி ஆகியோர் செய்திருந்தனர்.